Sunday 27 March 2016

டாக்டர். அம்மேத்கர் பற்றிய சில குறிப்புகள்.!

டாக்டர். அம்பேத்கர்

பாபா சாகேப் என்றழைக்கப்படுபவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியராகவும் விளங்கினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதிப் புரட்சியாளராகவும் திகழ்ந்த அம்பேத்கரைப் பற்றி இங்கு காண்போம்.

ஆரம்பகால வாழ்க்கை :
பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில், 1891, ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அவர் பள்ளியில் படிக்கும் பொழுது, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும், ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. 1913ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 1921-ல் முது அறிவியல் பட்டமும், 1923-ல் டிஎஸ்சி பட்டமும் பெற்றார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

சமூகப்பணிகள்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

புனே உடன்படிக்கை :
தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் என்று கூறியதை, காந்தி கடுமையாக எதிர்த்தார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள எர்வட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால், அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார்.

இந்திய அரசியலமைப்பில் பங்கு :
இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக, தேர்வு செய்யப்பட்டார். அம்பேத்கர் அதை ஏற்று, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகஸ்ட் 29-ல் அம்பேத்கர், இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது. இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ஆம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.

இறப்பு :
அம்பேத்கார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, 1956, டிசம்பர் 6-ல் டெல்லியில் இறந்தார். மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment