Saturday 14 May 2016

சத்தியமங்கலம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்

சத்தியமங்கலம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்குபவள் பராசக்தி ஆவாள். பராசக்தி பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள்.

கோவில் வரலாறு :

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங்கரையில் மக்கள் மாடு மேய்ப்பதை தொழிலாக கொண்டு வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது.

மாடு மேய்ப்பவன் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தான். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில் உள்ள புற்றில், தனது பாலைப் பொழிவதைப் பார்த்தான். மறுநாள் கிராம மக்களிடம் விபரத்தைக் கூறினான். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, 'நான் மண்ணார்க்காடு என்ற ஊரிலிருந்து வருகிறேன். பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் நான் தங்க விரும்புகிறேன். என்னை 'பண்ணாரி மாரியம்மன்"; எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள்" என்றார்.

அந்த அருள்வாக்கின்படி, அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத்துடன் சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

கோவில் சிறப்புகள் :

✧ இக்கோவிலில் திருநீறு பிரசாதத்திற்கு பதிலாக புற்று மண்தான் திருநீறு பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோவில் தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோவிலாகும். அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

✧ இக்கோவில் அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி. கடைசியாக ஆடு, மாடு, போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள். இக்கோயிலில் மிக சிறப்பு வாய்ந்த குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்றது.

திருவிழாக்கள் :

பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர். அமாவாசை உள்ளிட்ட விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

No comments:

Post a Comment