Thursday 12 May 2016

ரெங்கா ரெங்கா



ரெங்கா ரெங்கா

படித்தாலே போதும்! கட்டு கட்டா பணம் கிடைக்கும்! துர்முகி ஆண்டின் ராஜா: சுக்கிரன். இவருக்குரிய தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். இந்த ஆண்டில் நற்பலன் பெறும் ராசியினராயினும் சரி... உங்கள் சொந்த ஜாதகத்திலுள்ள லக்னத்தின் அடிப்படையில் சுக்கிரனால் தோஷம் ஏற்படுபவர்களாயினும் சரி... ரங்கநாதரை வணங்கினாலே போதும்  ..

ரங்கராஜருக்கு நன்றி: கஜேந்திரன் என்னும் யானையை காத்த விஷ்ணுவின் வரலாறு " ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்' என்னும் ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வைகுண்டத்தில் விஷ்ணுவும், மகாலட்சுமியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தோற்றுப் போனவர் எழுந்து  ஓடக்கூடாது என்பது நிபந்தனை.  அதன்படி விஷ்ணுவின் அங்கவஸ்திர நுனியும், லட்சுமியின் முந்தானையும் முடிச்சிடப்பட்டது. அந்த சமயத்தில் தான், முதலையிடம் சிக்கிய யானை கூக்குரலிட்ட சப்தம் விஷ்ணுவின் காதில் விழுந்தது. கணப்பொழுதும் தாமதிக்காமல் விஷ்ணு கருட வாகனத்தில் யானையைக் காக்கப் புறப்பட்டார். முந்தானை முடியப்பட்டு  இருந்ததால் மகாலட்சுமியும் பெருமாளோடு உடன் வந்தாள்.
ரங்கராஜ ஸ்தவத்தில் பராசர பட்டர்," "ஹே! ரங்கராஜரே! அந்த யானையை காப்பாற்றியதற்காக மட்டும் நான் உன்னை வணங்கவில்லை.
கணப்பொழுதும் தாமதிக்காமல் லட்சுமியோடு வந்தாயே! அந்த வேகத்தை எண்ணியே கை கூப்பி அஞ்சலி செய்கிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்த்தீர்களா! ரங்கநாதனை நம் கஷ்டம் தீர உளமாற வணங்கினாலே போதும். அவர் லட்சுமியோடு வருவார். அவளது பார்வை பட்டால் இப்பிறவிக்கு மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும் கோடி கோடியாய் பொருள் சேரும்.

நினைத்தாலே இன்பம்: கடவுளின் பெயர்கள் அமிர்தம் போல இனிமை மிக்கவை என்கிறது கருட புராணம். இந்த பெயர்கள் பயணம் செய்யும் மனிதனுக்கு "மூடை' போல உதவுகின்றன. மூடை என்றால் தலைச் சுமை அல்ல. அந்தக் காலத்தில் வெளியூர் செல்பவர்கள் புளியோதரை, தயிர்சாதம் போன்றவற்றை துணியில் கட்டி தோளில் சுமந்து செல்வர். வழியிலுள்ள ஆறு, குளக்கரைகளில் அமர்ந்து கட்டுச் சாத மூடையைப் பிரித்து சாப்பிடுவர். வாழ்வும் ஒரு பயணம் போலத் தான். அதில் கட்டுச்சாத மூடை போல கடவுளின் திருநாமம்(பெயர்) மனிதனுக்கு உதவுகிறது. "ரங்கநாதா, கோவிந்தா, கோபாலா' என்று வாய்விட்டுச் சொல்லக் கூடத் தேவையில்லை. மனதால் நினைத்தாலே சிரமம் நீங்கி இன்ப வாழ்வு உண்டாகும்.

நல்ல புத்தி கொடுப்பவர்: ஸ்ரீரங்கத்தில், வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான எம்பார் சுவாமியின் ராமாயண சொற்பொழிவு தினமும் நடந்தது. வடக்கு சித்திரை வீதியில் வசித்த ஒருவர் மட்டும் அந்த சொற்பொழிவுக்கு வராமல், தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பொழுதைக் கழித்தார். பலரும் அந்த திண்ணைக்காரரை அழைத்தும் வர மறுத்து விட்டார். ஒருநாள் திண்ணைக்காரர் ராமாயணம் கேட்க திடீரென வந்தார். அவரது திடீர் வரவு பற்றி அறிய பலருக்கும் ஆசை ஏற்பட்டது.
அப்போது எம்பார்,""ஒருவர் கோவிலுக்கு வருவதற்கும், வராமல் இருப்பதற்கும் அவரவர் மனநிலையே காரணம் என்று தவறாக எண்ணுகிறீர்கள். இத்தனை நாளும் உபன்யாசம் கேட்க வராதவர் இன்று வருவதற்கு காரணம் எம்பெருமான் ரங்கனே. அவனே மனதிற்குள் இருந்து நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறான்,'' என்றார். உலகில் நடக்கும் அனைத்து செயலுக்கும் மூல காரணமாக இருப்பவர் அந்த ரங்கநாதனே.

அங்கேயும் இவர் போல...!: ஸ்ரீரங்கத்தில் வசித்த சொட்டை நம்பி என்ற அடியவரின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த அவரிடம் சீடர் ஒருவர், ""சுவாமி! தங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?'' என்றார்.
அதற்கு சொட்டை நம்பி, ""ரங்கநாதரின் அருளால் எனக்கு நல்ல குருநாதரின் சம்பந்தம் கிடைத்தது. மீண்டும் பூமிக்குத் திரும்பி வராத மோட்ச கதிக்கு செல்வேன் என்ற தெளிவும் இருக்கிறது. இருந்தாலும் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாள், இங்கிருக்கும் ரங்கநாதரைப் போல் இருந்தால் தான், அங்கு இருப்பேன். இல்லாவிட்டால் ஸ்ரீரங்கத்திற்கே மீண்டும் வந்து விடுவேன்,'' என்று பதில் அளித்தார்.

"
அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று தொண்டரடிப் பொடியாழ்வார் கூறியதை சொட்டைநம்பியின் கடைசி நேர எண்ணம் தெரியப்படுத்துகிறது.

தூங்கினால் "ரகசியம்' புரியும்: ஸ்ரீரங்கம் கோவிலின் அர்ச்சகரான பராசர பட்டர், ஒரு முறை சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
""
எல்லா உயிர்களையும் காத்தருள்வதால் பெருமாளுக்கு "ரட்சகன்' (காப்பாற்றுபவன்) என்று பெயருண்டு,'' என்று பட்டர் சொன்ன போது ஒருவர் குறுக்கிட்டார். ""சுவாமி! என் குடும்பத்தை நான் தான் காப்பாற்று கிறேன். பெருமாள் காப்பாற்றுகிறார் என்று சாஸ்திரம் சொல்வதை எப்படி நம்புவது? '' என்றார்.

அதற்கு பட்டர், ""இதற்கான பதிலை நாளை சொல்கிறேன். காலையில் என் திருமாளிகைக்கு (வீடு) வாருங்கள்'' என்று அனுப்பி விட்டார். காலையில் தூங்கி எழுந்த பக்தர் நீராடியதும் பட்டரின் திருமாளிகைக்கு வந்தார். அவரிடம் பட்டர்,""இரவு நன்றாக தூங்கினீரா?'' என்று கேட்டார். "...  நன்றாக தூங்கினேன்'' என்றார். "தூக்கத்தில் உம்மால் எங்கிருக்கிறோம் என்று உணர முடிந்ததா?'' என்று கேட்டார். "அதெப்படி முடியும் சுவாமி,'' என்றார் பக்தர். "உம்மை நீரே உணராத அந்த சமயத்திலும் உம்மைக் காத்தது யார்?'' என்று பட்டர் கேட்க வந்தவர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார்.
அவரிடம் பராசரர், "தூங்கும் சமயத்திலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காப்பாற்றுபவர் இறைவனே. தூக்கத்தில் காக்கும் அந்த ரங்கனே, நாம் விழித்திருக்கும் போதும் ரட்சிக்கும் தொழிலைச் செய்கிறான். அதனால் தான் அவனை "ரட்சகன்' என்று சொன்னேன். தூக்கம் என்பதை கடவுள் நமக்கு விதித்திருப்பதே இந்த ரகசியத்தை உணர்வதற்காகத் தான்,'' என்றார்.

ரங்கநாதா...! உன் கால் வலிக்குதா...!: ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது துயில் கொண்டுள்ள ரங்கநாதர் பற்றி, "நடந்த கால்கள் நொந்தனவோ?' என்று பாடுகிறார் திருமழிசையாழ்வார்.

பெருமாள் எப்போது நடந்து களைத்தார் என்பதற்கான காரணத்தை தங்களின் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றனர். அவர் எடுத்த இரண்டு அவதாரங்களில் வெகுதூரம் நடந்திருக்கிறார்.

ராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற போது அவர் பாதுகை கூட இல்லாமல் நடந்தார். கிருஷ்ணராக அவதரித்தபோது தினமும் பசுக்களை மேய்க்க பிருந்தாவனம் முழுவதும் சுற்றி அலைந்தார். இதன் பின் ஓய்வெடுக்கவே காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.


No comments:

Post a Comment