Sunday 24 April 2016

24-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

24-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

ஜி.யு.போப்

ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யு.போப் அவர்கள் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கனடாவில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோது இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839 இல் தமிழகம் வந்தார்.

கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886இல் திருக்குறளை ளுயஉசநன முரசயட என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளவற்றது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் தனது 88 வயதில் 1908 ஆம் ஆண்டு மறைந்தார்.

சத்திய சாய் பாபா

இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்படும் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள் 1926 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் புட்டபர்த்தி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் பகவான் சத்திய சாய் பாபா அவர்கள் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மறைந்தார்.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தேர்வுப் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களை எடுத்த வீரர் இவரே ஆவார். இந்தியாவில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதையும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் அவர்கள் 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கடலூரில் பிறந்தார்.

1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சோயுஸ்-1 விண்கலத்தின் பரசூட் விரியாத காரணத்தால் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் கொமாரோவ் அவ்விண்கலத்தில் இறந்தார்.

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சீனாவின் முதலாவது செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment