Thursday 31 March 2016

வால்மீகி முனிவர்

வால்மீகி முனிவர்

வால்மீகி முனிவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வட இந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவரது ஆசிரமம் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பித்தூரில் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன் மற்றும் குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.

வால்மீகி வரலாறு :
வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். ஒருமுறை நாரத முனிவரிடம் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் நீங்கள் பங்கு கொள்வீர்களா? என வினாவினார். அவர்கள் இதற்கு மறுப்பு கூறினார்கள்.

"இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை' என்று உணர்ந்து முனிவரிடம் சரணடைந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.

எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கரையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்தார். கடைசியில் 'ஓ முனிவனே எழுந்திரு!' என்ற குரல் அவனை எழுப்பியது.

இவரே, 'நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன்' என்று பதில் கூற, 'இனி நீ கொள்ளைக்காரன் அல்ல, கரையான் புற்றிலிருந்து தோன்றியவர் (வால்மீகி) என்று வழங்கப்படுவாய்' என்று அக்குரல் கூறியது.

இவர் 700 ஆண்டுகள், 32 நாட்கள் உயிர்வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் எட்டிக்குடு எனும் ஊரில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
வால்மீகி இயற்றிய இராமாயணத்தின் சிறப்புகள் :

வால்மீகி இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment