Thursday 27 December 2018

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

'உங்களால் மறக்க முடியாத மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து விடுங்கள்.. உங்களால் மன்னிக்க முடியாத மற்றவர்களின் குற்றங்களை மறந்து விடுங்கள்..!"

கெப்ளர்

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார்.

இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்" என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன் வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.

இவர் 'அஸ்ட்ரோநோமியா நோவா", 'ஹார்மோனிஸ் முன்டி" ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.

கோள்களின் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 3 விதிகளைக் கண்டறிந்தார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்து, இவர் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை கண்டறிந்தார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா" என்ற புகழ்பெற்ற நூலை 1621ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இவர்தான் முதன்முதலில் 'சாட்டிலைட்" என்ற வார்த்தையை உருவாக்கினார். பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 58-வது வயதில் (1630) மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

லூயி பாஸ்டர்

நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

இவர் 1856ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.

தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்" என்று அழைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார்.

ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 72-வது வயதில் (1895) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.

வணக்கம் நண்பர்களே
🌹🙏🌹

No comments:

Post a Comment