Friday 13 May 2016

உடலிலுள்ள பஞ்ச பூதங்களை எப்படி கையாள்வது?

உடலிலுள்ள பஞ்ச பூதங்களை எப்படி கையாள்வது?

சத்குரு:

அடிப்படையில் இந்த உடல் என்பது பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயத்தால் ஆனது. பஞ்சபூதங்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை என்று நம் நாட்டில் இந்த உடலைக் குறித்து வழங்குவதுண்டு.

உடலின் கூட்டமைப்பு என்று பார்த்தால்,
அதில் 72% நீரும்,
12% நிலமும்,
6% காற்றும்,
4% நெருப்பும்,
மீதி ஆகாயமும் கலந்து இவ்வுடல் உருவாகி இருக்கிறது.

இந்தப் பஞ்சபூதங்கள் உங்களுக்குள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே, எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. ‘பூத’ என்ற சொல், மூலப் பொருட்கள் (அ) அடிப்படைக் கூறுகளை குறிக்கிறது.

‘பூதஷுத்தி’ என்பது இந்த அடிப்படை மூலப் பொருட்களின் அசுத்தக் கலவைகளில் இருந்து, அதன் கறைகளில் இருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. அதாவது உடற்சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது.

‘பூதஷுத்தி’ என்பது யோகக் கலையின் மிக அடிப்படையான சாதகப் பயிற்சி.
இதனைத் தொடர்ந்து செய்தால், உடற்சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு, உடல் தாண்டிய பரிமாணங்கள் திறந்து கொள்வதற்கு வழி செய்யும்.

உடலில் இந்த ‘பூதஷுத்தி’யை மிக எளிமையாக செய்து கொள்ளலாம். இப்படி எளிதாக செய்து கொள்ளும் முறைகள், தீவிரமான பூதஷுத்தி முறைகளைப் போல் கச்சிதமாக வேலை செய்யாவிட்டாலும்,
நிச்சயம் ஓரளவிற்கு வேலை செய்யும்.

✴நீர்:
பஞ்சபூதங்களில், நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது நீரின் மீது தான். ஏனெனில், நீர் தான் நம் உடலில் எழுபத்தி இரண்டு சதவிகிதம் நிறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, அதற்கு ஞாபகசக்தியும் அதிகம்.

இதை சுத்திகரித்துக் கொள்ள, நீங்கள் பருகும் நீரில், வேம்பு அல்லது துளசி இலைகளை போட்டுக் கொள்ளலாம்.
இது இரசாயன மாசுக்களை அகற்றாவிட்டாலும், தண்ணீரை சக்தி வாய்ந்ததாகவும் வீரியமிக்கதாகவும் மாற்றிவிடும்.

நீங்கள் செய்து கொள்ளக் கூடிய வேறொன்று, தண்ணீரை செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். செம்பினால் நீருக்கு ஏற்படும் குணமாற்றம் நமக்கு மிக நல்லது. அல்லது லிங்க வடிவத்திலுள்ள ஜுவரசத்தை தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.
இது சக்தியூட்டப்பட்ட ஒரு வடிவம்.

✴நிலம்:
நம் உடலின் பன்னிரண்டு சதவிகிதம் நிலம்.
உணவு உங்களுக்குள்ளே செல்லும் விதம், அது யார் வழியே உங்களுக்கு வழங்கப்பட்டது, அதை நீங்கள் உட்கொள்ளும் முறை, அணுகும் முறை என அனைத்துமே மிக முக்கியம்.
இது எல்லாவற்றையும் விட, நீங்கள் உண்ணும் அந்த உணவே உங்கள் உயிர்.
மற்றொரு உயிர் தன் உயிரை மாய்த்துக் கொண்டு, உங்கள் உயிரைக் காக்கிறது.

நாம் வாழ தங்கள் உயிரை விட்டுக் கொடுக்கும் எல்லா உயிரினங்களுக்கும், அளவில்லா நன்றியுணர்வுடன் உணவை உண்டோமேயானால், அந்த உணவு நம்முள் முற்றிலும் வேறு வகையில் செயல்படும்.

✴காற்று:
காற்று ஆறு சதவிகிதம்.
அதில் ஒரு சதவிகிதமோ அல்லது அதிலும் குறைவோ தான் நீங்கள் சுவாசிக்கும் காற்று.
மற்றவை பல்வேறு வகைகளில் நிகழ்கிறது.
நீங்கள் சுவாசிக்கும் காற்று தான் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் என்றல்ல.

உங்களுக்குள் இருக்கும் காற்றை நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பதும் உங்கள் நலனில் பங்கு வகிக்கிறது. அதற்காக நீங்கள் சுவாசிக்கும் காற்று முக்கியமல்ல என்று அர்த்தம் அல்ல.

நீங்கள் சுவாசிக்கும் அந்த ஒரு சதவிகிதமும் முக்கியம் தான் என்றாலும் நகரில், வாழும் உங்களுக்கு நீங்கள் சுவாசிக்கும் காற்றின் மீது எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.
அதனால் குறைந்தபட்சமாக பூங்காவிலோ அல்லது ஏதேனும் ஏரிக் கரையிலோ சிறிது நேரம் நடக்கலாம்.

அதிலும் குழந்தைகள் இருந்தால், கண்டிப்பாக மாதம் ஒரு முறையேனும் அவர்களை நீங்கள் வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் சினிமா அரங்கிற்கோ அல்லது அதுபோன்ற பிற இடங்களுக்கோ அல்ல.

சினிமா அரங்கம் போன்ற காற்றடைத்த இடங்களில், அதிலும் அங்கு திரையில் நிகழும் சப்தம், எண்ணங்கள், உணர்ச்சிகள் என்பது மட்டுமல்லாது, அதைப் பார்க்கும் மனிதர்களின் மனதில் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் என அந்த அடைபட்ட காற்றிலும் அதன் தாக்கம் அதீதமாக இருக்கும்.

அதனால் அவர்களை சினிமாவிற்கு அழைத்துச் செல்வதை விட, அவர்களை ஏதேனும் நதிக் கரைக்கு கூட்டிச் சென்று,
அவர்களுக்கு நீந்தச் சொல்லிக் கொடுக்கலாம்,
அல்லது மலையேற்றம் செய்யக் கூட்டிச் செல்லலாம்.

அதற்காக அவர்களை இமாலய மலைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்றல்ல.
ஊரருகில் இருக்கும் சிறு குன்றும் குழந்தைக்கு பெரும் மலைதான்.

அதனால் சின்னதாக ஏதோ ஒரு பாறை இருக்கிறது என்றால் அது கூடப் போதும்.
அதில் ஏறி சிறிது நேரம் அமர்ந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு அதுவே குதூகலமாக இருக்கும். அத்தோடு இது போன்ற செயல்கள் அவர்களை ஆரோக்கியமாகவும் வைக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், உங்கள் உடலும் மனமும் வேறு வகையில் செயல்படும், இது எல்லாவற்றையும் விட, உங்களை மறந்து நீங்கள் இந்தப் படைப்போடு ஒன்றி இருக்கும் அந்தத் தருணங்களும் அம்சமும் உங்களுக்கு மிக அற்புதமாக வேலை செய்யும்.

✴நெருப்பு:
தினமும் சிறிது நேரம் உங்கள் மீது சூரிய ஒளி படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இன்றும் சூரிய ஒளி பரிசுத்தமாகத்தான் இருக்கிறது. அதிருஷ்டவசமாக, அதை யாரும் மாசுபடுத்த முடியாது.
அத்தோடு, உங்களுக்குள் எவ்விதமான நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது என்பதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆம், உங்களுக்கு கொழுந்து விட்டு எரிவது, பேராசைத் தீயா, வெறுப்பா, கோபமா, அன்பா அல்லது கருணையா என்பதைப் பாருங்கள். அதை நீங்கள் பார்த்துக் கொண்டால், உங்கள் உடல், மன நலனைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையிராது.
அது தானாகவே சரியாகச் செயல்படும்.

✴ஆகாயம்:
ஆகாயம் என்பது ஒரு இடைப்பட்ட நிலை.
படைப்பிற்கும், படைப்பின் மூலம் என்பதற்குமான இடைபட்ட நிலை.

மற்ற நான்கினையும் நல்ல நிலையில் நாம் வைத்திருந்தால், ஆகாயக் கூறு தானாகவே சரியாக நிகழும்.

‘ஆகாய’த்தின் ஒத்துழைப்பை மட்டும் நீங்கள் பெற்றுவிட்டால், உங்கள் வாழ்வில் அது போன்ற ஒரு திருவருட்பேறு வேறொன்றுமில்லை.

✴ஜீவரசம்…
இது சத்குரு அவர்களால் சக்தியூட்டப்பட்ட லிங்கம் போன்ற அமைப்புடைய ஒரு வடிவம். இதனை தண்ணீரில் இட்டு பருகுவதன் மூலம் நாம் பருகும் நீரை வீரியமிக்கதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment