Friday 13 May 2016

ஸ்ரீ ஆதி சங்கரரின் சரிதம்

ஸ்ரீ  ஆதி சங்கரரின் சரிதம்                                           
 
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுதியது

பரசுராமர் பிரதிஷ்டை செய்த க்ஷேத்திரம் கேரள தேசம். அந்த கேரள தேசத்தில் காலடி என்னும் க்ஷேத்திரத்தில் சிவகுரு ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு சிவாம்சமாக ஸ்ரீ ஆதி சங்கரர் அவதரித்தார். அவருக்கு ஐந்து வயதில் உபநயனம் ஆகியது. பிறகு தகப்பனார் இறந்து விடுகிறார். அப்போது ஆதி சங்கரர் தினமும் பிக்ஷை சென்று உணவு உண்பார். அதுபோல் ஒரு நாள் ஒரு வீட்டில் சென்று கேட்க, அந்த வீட்டு அம்மாள் கடுமையான வறுமையில் வாட பிக்ஷை அளிக்க ஒன்றுமேயில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை பிக்ஷை அளித்தார். அதை ஆதி சங்கரர் பிக்ஷையாக ஏற்றுக் கொண்டு கனகதாரா ஸ்லோகத்தை சொல்லி அவ்வீட்டில் கனகதாரையை பொழிய வைத்தார்.

ஒரு நாள் ஆதி சங்கரர் தனது தாயாரிடம் தான் சந்நியாசம் பெற்றுக் கொள்ளவா என்று கேட்க தாயார் கூடாது என்று மறுத்து விடுகிறார், பின்னர் ஒரு நாள் தாயாருக்காக நதியை பக்கத்தில் வரவைத்தார், அதில் ஒரு நாள் ஸ்நானம் செய்து கொண்டிருக்கும்போது முதலை ஒன்று காலை கவ்வி விடுகிறது, உடனே ஆதி சங்கரர் கரையில் உள்ள தாயாரிடம் தான் சந்நியாசம் பெற்று கொள்ளுகிறேன் என்று சொன்னால்தான் முதலை தன் காலை விடும் என்று சொல்ல தாயாரும் பையன் பிழைத்ததுக் கொண்டால் போதும் என்று ஏற்றுக் கொண்டார். உடனே முதலை காலை விட்டுவிட்டு மறைந்துவிட்டது.

தாயாரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு சந்நியாசம் பெற்றுக் கொள்வதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஒம்காரேஷ்வர் கோவிலுக்கு யாத்திரை செல்கிறார். சென்ற இடத்தில் ஒரே வெள்ளப் பிரவாகமாக உள்ளது. அவற்றை தனது கமண்டலத்தில் அடக்கி விட்டார்.

பின்னர் கோவிந்த பகவத்பாதரிடம் சந்நியாசம் பெற்றுக் கொண்டார். அவருடன் கொஞ்ச காலம் தங்கி அவருக்கு சேவை புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து காசிக்கு நடந்தே யாத்திரை சென்றார். காசியில் மிகப்பெரிய பண்டிதர்களையெல்லாம் வாதம் செய்து வெல்கிறார். பெரிய பெரிய பௌத்த மற்றும் ஜைன பண்டிதர்களையும் வென்றார்.

சங்கரர் காசி ஷேத்திரத்தில் இருந்தபோது சநந்தனர் என்னும் அந்தண குமாரருக்கு சந்நியாச தீக்ஷை கொடுத்தார். ஒரு நாள் கங்கையின் கரையில் ஆதி சங்கரர் இருந்தார். மறு கரையில் சநந்தனர் இருந்தார். சங்கரர் அவரை அழைக்க உடனே சநந்தனர் நதியின் மீதே நடந்து வர ஆரம்பித்து விட்டார். அவர் ஒவ்வொரு பாதத்தை வைக்க வைக்க பத்மம் மலர்ந்தது. பத்மத்தின் மீது பாதம் வைத்து கரைக்கு வந்து விட்டார். இதைக் கண்டு ஆதி சங்கரர் மிகவும் மகிழ்ச்சியுடன் பத்மபாதரே என்று அழைக்க அன்று முதல் அவர் பெயர் பத்மபாதர் என்றாகியது.

காசியில் ஒரு நாள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது ஈஸ்வரனே சண்டாள வேஷத்தில் வந்து ஆதி சங்கரரை வழிமறித்தார். பகவத்பாதாளுக்கும் ஈஸ்வரனுக்கும் விவாதம் நடக்கிறது. பின்னர் உண்மை அறிந்த ஆச்சார்யாள் ஈஸ்வரனை துதித்து மனிஷா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தை இயற்றுகிறார்.

இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே
நித்யேபரே நிர்மலே
சண்டாளோ ஸ்து து த்விஜோஸ்து
குருரித்யேஷா மனிஷா மம ||

அத்தகு
நித்ய நிர்மல
பேருண்மை நானென்ற நம்பிக்கை
கொண்டோன் பஞ்சமனோ
பார்ப்பானோ ஒப்புகிறேன்
எந்தன்குரு…. (2)

உடனே ஈஸ்வரனும் சண்டாள வேஷத்திலிருந்து சிவபெருமானாக பார்வதியுடன் காட்சியளிக்கிறார்.

பின்னர் அங்கிருந்து மெல்ல மெல்ல பத்ரிநாத் செல்கிறார். அங்கே வேத வியாஸரை தரிசித்தார். அவர்தாம் வேதாந்தத்தின் சாரமான வார்த்தை களை எல்லாம் எடுத்து எழுதியவர். அவற்றிற்க்கு பாஷ்யம் எழுதியது ஆதி சங்கரர். உடனே வேத வியாஸர் சந்தோஷப்பட்டு இன்னும் ஒரு பதினாறு வருடம் இரு என்று ஆசீர்வாதம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள விக்ரஹத்தை யாரோ சிலர் உஷ்ணகுண்டத்தில் போட்டுவிட்டார். இதை தனது யோக சக்தியின் மூலம் தெரிந்து கொண்டு அதை புனர் பிரதிஷ்டை செய்தார்.

பிறகு கேதார்நாத் சென்றார். அங்கிருந்து யோக சரீரம் எடுத்துக் கொண்டு கைலாஸம் செல்கிறார். ஸ்ரீ பரமேஸ்வரனை தரிசனம் செய்து சிவமஹிமை ஸ்லோகம் இயற்றுகிறார். பரமேசுவரனிடமிருந்து ஐந்து லிங்கங்களையும் செளந்தர்ய லஹரியையும் பெற்றார். வாயிலில் இருந்த நந்தி பகவான் ஆதி சங்கரரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு விட்டார். பின்னர் அதில் பாதியை மட்டும் தந்தார். அதை பெற்றுக் கொண்டு கேதார்நாத்துக்கு வந்தார். முக்தி லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தார். இதைத்தான் கேதார்நாத்தில் சித்தி அடைந்தார் என்பார்கள். அது தவறு. யோக நிலையில் கைலாசம் சென்று வந்துவிட்டாரே தவிர அங்கு சமாதியாகவில்லை.

பின்னர் கேதார்நாத்திலிருந்து கீழே இறங்கி பிராயாகை நோக்கி வந்தார். அங்கு ஒருவர் பெளத்த மதத்தை கண்டிப்பதற்காக, அதில் உள்ள அனைத்து தத்துவங்களையும் அதில் இருந்து கொண்டு எல்லாம் கற்று கொண்டு, பின்னர் அதைக் கண்டித்து விட்டு வேதங்களை அடிப்படையாக வைத்து மீமாம்சங்களை வளர்த்தவர். அவர்தான் குமாரிலபட்டர். அவரை ஆதி சங்கரர் வாதத்திற்கு அழைத்து அத்வைதத்தை ஸ்தாபிக்க சென்றார்.

குமாரிலபட்டரை பெளத்தர்கள் வாதத்திற்கு அழைத்து மலையிலிருந்து தள்ளிவிட்டனர். அதில் காலில் சிறியதாக அடிபட்டது. எதிர்சப்தம் செய்ததால் காலில் அடி பட்டுவிட்டது. பெளத்த குருமார்ககளை ஏமாற்றியதற்காக மனம் வருந்தி பிராயச்சித்தமாக உமியில் நெருப்பை வைத்து விட்டு அதில் இறங்கி உயிர் நீக்க போகிறேன் என்றார்.

பொதுவாக தற்கொலை செய்து கொள்வது தவறு. ஆனால் எந்த இடத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி உள்ளதோ, எங்கு சோமேஸ்வரர் சன்னதி உள்ளதோ அந்த இடத்தில் செய்து கொண்டால் முக்தி கிடைக்கும் என்று உள்ளது.

எனவே அவர் ஆசார்யாளிடம் மாகிஷ்மதி என்று ஒரு நகரம் இருக்கிறது. அங்கு சென்று மண்டனமிஸ்ரர் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து வாதம் செய் என்று சொல்கிறார்.

பகவத்பாதாள் காசி வழியாக மாகிஷ்மதி செல்கிறார். அங்கே செல்லும்போது அவருடைய இல்லத்தில் ஸ்ராத்த தினம். ஆகவே வாசலில் தங்கி விட்டு பிறகு ஸ்ராத்தம் முடிந்தவுடன் உள்ளே சென்று அவரை வாதத்திற்கு அழைத்தார். பிரம்மாவின் அவதாரம்தான் மண்டனமிஸ்ரர். அவருடைய மனைவி ஸரஸவாணி ஸரஸ்வதியின் அம்சம். குமாரிலபட்டர் முருகனின் அம்சம்.

ஆதி சங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் விவாதம் ஆரம்பமாகிறது. இருவரும் கழுத்தில் மாலை அணிகிறார்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்கள் தோற்று விட்டார்கள் என்று அர்த்தம். பதினைந்து நாட்கள் வாதம் நடந்தது. அனுஷ்டானம், பிக்ஷை நேரம் தவிர்த்து வாதம் நடந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அப்பொழுது ஸரஸவாணி போக சம்மந்தமான கேள்விகளை கேட்கிறார். ஆதி சங்கரருக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாததால் ஒரு நாள் நேரம் கேட்கிறார். அதன்படி அன்று அருகில் இருக்கும் ஒரு ஊரில் அரசன் இறந்துவிட அவனது உடலில் சென்று அனைத்தும் அறிந்து மீண்டும் அவனது சரீரத்திலிருந்து வெளியேறி ஸரஸவாணியிடம் பதில் அளிக்கிறார். ஆதி சங்கரர் ஜெயித்து விடுகிறார். பின்னர் மண்டனமிஸ்ரருக்கு சந்நியாசம் கொடுத்து, ஸுரேஷ்வராசார்யர் என்று பட்டம் கொடுக்கிறார். மண்டனமிஸ்ரர் ஸரஸவாணியை அழைத்து தங்களுடனே வருமாறு அழைக்கிறார். அதற்கு ஸரஸவாணி நான் தங்கள் பின்னாலே வருவேன். நீங்கள் என்னை திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் அந்த இடத்திலேயே நான் நின்றுவிடுவேன் என்று சொல்கிறார். அதன்படி மூவரும் கிளம்பிச் செல்ல துங்கபத்ரா நதிக்கரையின் பக்கம் கொலுசு சத்தம் கேட்காமல் நின்றுவிட ஆதி சங்கரர் திரும்பிப் பார்க்கிறார். உடனே அங்கேயே ஸரஸவாணி நின்று விடுகிறார். அந்த இடம் இன்றும் அப்படியே இருக்கிறது. அங்கே சாரதா தேவி இன்றும் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.

பின்னர் ஹம்ஸதாமலகர் என்றொருவர் இருந்தார். அவருக்கு சிறு வயது முதலே பேச்சு வரவில்லை என்று அவரை அழைத்துக் கொண்டு ஆதி சங்கரரிடம் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு சங்கரர் அவரைப் பார்த்து நீ யார் என்று கேட்க அதுவரை பேசாமல் ஊமையாக இருந்தவர் தொடர்ந்து வேதாந்தம் மொத்தத்தையும் சொல்லி விடுகிறார். பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷமடைந்து அவரை ஆசார்யாளுடனே அனுப்பி விடுகிறார்கள்.

சிஷ்யன் எழுதிய அத்வைத நூலிற்க்கு ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதினார். தினந்தோறும் ஸ்நானம் செய்த பின்னர் அனைவரும் ஆதி சங்கரரிடம் பாஷ்யம் பாடம் கேட்பார்கள். ஒரு நாள் ஒரு பையன் வர தாமதமாகியது. அப்போது சங்கரர் நீங்கள் பாடத்தை தொடருங்கள், அவன் வர தாமதமாகும் என்றார். அதற்குள்ளாக அந்த பையன் தோடக விருத்தத்தில் தோடகாஷ்டகம் செய்துக் கொண்டு வந்தான்.

சில நாட்கள் கழித்து ஆதி சங்கரரின் தாயார் இறந்து விட்டார். இது கேட்டு ஆதி சங்கரர் காலடி செல்கிறார். அங்கு வீட்டின் பின்னால் சமாதி கட்டி விடுகிறார். இன்றும் அந்த சமாதியை காணலாம். இதை அனைத்து நம்பூதிரிகளும் ஆட்சேபித்தார்கள். இதனால் ஆதி சங்கரர் அங்கு இனிமேல் நம்பூதிரிகள் யாரும் இருக்கக்கூடாது என்று சொல்லி விட்டார். தலை கால் தூங்கி வந்த நம்பூதிரிகள் மட்டும் தலைகட்டு நம்பூதிரி கால்கட்டு நம்பூதிரி என்று இரு குடும்பத்தினர் மட்டுமே இன்று வரை அங்கு உள்ளனர். அந்த இரு குடும்பங்களும் இன்று வரை கிருஷ்ணன் கோயில் பூஜை செய்து வருகின்றனர். இன்று போனாலும் அதைப் பார்க்கலாம்.

பிறகு அங்கிருந்து பல க்ஷேத்திரங்கள் சென்று ஸ்ரீசைலம் வந்தடைந்தார். ஸ்ரீசைலத்தில்தான் சிவானந்த லஹரி இயற்றுகிறார். அந்த க்ஷேத்திரத்தில் ஒரு காபாலிகன், ஒரு அரசனோ அல்லது சந்நியாசியையோ கொன்றால்தான் தனது காரியம் சித்தியாகும் என்று சொல்லி ஆதி சங்கரரை வெட்ட வருகிறான். அப்போது பத்மபாதர் மீது நரசிம்மர் வந்து காபாலிகனை வீரட்டுகிறார். மீண்டும் அங்கிருந்து பல க்ஷேத்திரங்கள் செல்கிறார். திருப்பதியில் ஜனாகர்ஷனம் தனாகர்ஷனம் ஆகிய இரண்டிற்காகவும் இரண்டு யந்திர பிரதிஷ்டை செய்கிறார். இதன் நினைவாக அங்கு சுப்ரபாத மண்டபத்தில் ஒரு கல்லின் மேல் சிலை ஒன்று இருக்கும். புஷ் கரினி கரையில் ஆதி சங்கரரின் விமானம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேங்கட சுப்ரமணியம் என்று சில பேருக்கு பெயர் இருக்கிறது. அப்படிப்பட்ட உற்சவ விக்ரஹத்தையும் ஆதி சங்கரர் விமானத்தில் வைத்திருக்கிறார்கள்.
 
பின்னர் சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் வந்தார். ராமர் பிறந்த அயோத்தி, கிருஷ்ணர் பிறந்த மதுரா, கங்கை உற்பத்தியாகும் ஹரித்வார், காசி, காஞ்சி, அவந்திகா [உஜ்ஜயினி] ஒம்காரேஷ்வர், கிருஷ்ணர் ராஜ்யபாலனம் செய்த துவாரகா என்று ஏழு மோக்ஷபுரியாகும். அதில் ஒன்றான காஞ்சிக்கு ஆதி சங்கரர் வந்தார். இதில் ஐந்தாவது வருவது காஞ்சியாகும். இங்குதான் காமாக்ஷி அம்பாள்   பிலாகாசமாகவும், ரூபமாகவும் அருளாசி செய்துக் கொண்டிருக் கிறார். ஆதி சங்கரர் இங்கு வரும் போது அம்பாள் உக்ர ரூபிணியாக இருந்தாள். எனவே பகவத்பாதாள் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து சாந்தரூபிணியாக ஆக்குகிறார்.

பிறகு ஆதி சங்கரர் பலபேர்களைச் சந்தித்து காஞ்சியில் ஸர்வக்ஞ பீடம் ஏறுகிறார். இப்போது கோவில் உற்சவ மூர்த்தி இருக்கும் இடத்தின் எதிரில் உள்ள மண்டபத்து பக்கத்தில் துண்டீர மஹாராஜா இருக்கும் இடத்தில் ஸர்வக்ஞபீடம் ஏறுகிறார். அப்போது திருநெல்வேலி மாவட்டம்  பிரம்மதேசத்தில் உபநயனம் ஆன சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பல கேள்விகளை சங்கரரிடம் கேட்க அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். பின்னர் அச்சிறுவன் தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறான். சங்கரர் அச்சிறுவனது பாண்டித்யத்தைப் பார்த்து அவருக்கு சந்நியாசம் தந்து ஸ்ரீ ஸர்வக்ஞேந்த்ர ஸரஸ்வதி பட்டம் கொடுத்து காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரிக்க செய்கிறார். முதல் சிஷ்யர் பத்மபாதர். கடைசியாக வந்தது ஸர்வக்ஞேந்த்ரர். பிறகு சுரேஷ்வராச்சாரியாரிடம் மற்ற லௌகீக விஷயங்களை பார்த்துக் கொள்ள சொல்கிறார்.

ஸ்ரீ காமாக்ஷி கோவிலிலேயே பிரகாரம் சுற்றி வரும் வழியில் ஜீவன் முக்தராக ஆகி இன்று வரை ஆசீர்வதித்து வருகிறார். சிவபெருமானிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த ஐந்து லிங்கத்தில், முக்திலிங்கத்தை கேதார்நாத்திலும், மோக்ஷலிங்கத்தை நேபாளத்திலும், போகலிங்கத்தை கூடலியிலும், வரலிங்கத்தை சிதம்பரத்திலும் பிரதிஷ்டை செய்கிறார். யோக லிங்கத்தை தானே வைத்துக் கொள்கிறார். ஆதி சங்கரர் காஞ்சி .காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதி. இன்று வரை அது தொடர்ந்து 70- வது பீடாதிபதி வரை தொடர்ந்து பூஜை நடைப்பெற்று வருகிறது.

No comments:

Post a Comment