Monday 18 April 2016

ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை பெறுவது எப்படி?

ஆதரவற்ற முதியோர் உதவித் தொகை பெறுவது எப்படி?

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம் வழிவகை செய்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் ஆகியோருக்கு தாலுக்கா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

வயதுச் சான்று :

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது.

இருப்பிடச் சான்று :

தமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். ஆனால் முடிவில் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆய்வு :

இந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு விண்ணப்பதாரர் பரிந்துரைக்கப்படுகிறார்.

உதவித் தொகை :

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுக்கா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money opder) வழியாக அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment