Friday 15 April 2016

ஆனந்தம் தரும் அத்ரிமலை!

ஆனந்தம் தரும் அத்ரிமலை!
ஆன்மீகத்தின் புனித பூமியான தமிழ்நாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து வந்த சித்தர்கள் தங்கி தவம் செய்த இடங்களில் ஒன்று தான் அத்ரிமலை. உலகமே போற்றும் தமிழகத்தில் பிறந்த போதிதர்மரும் தங்கி தவம் செய்த இடம் தான் அத்ரிமலை. சித்தம் தெளிந்தவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் எப்படி சாத்தியமோ அதேபோல் பணிவுடன் அவர்களை வணங்கி செல்பவர்களுக்கு அத்ரிமலையின் அத்தனை ரகசிங்களும் புரியும். இப்போது உள்ள காலகட்டத்தில் வாகன வசதியும் பணவசதியும் இருக்கும் நிலையில் அனைவரும் சதுரகிரி, அத்ரிமலை, பொதிகைமலை போன்றபல இடங்களுக்கு செல்வது எளிது ஆனால் அந்த இடங்களின் சிறப்பை அனைவரும் புரிந்து கொள்ள முடியவில்லை காரணம் புனித பயணம் சுற்றுல்லாவாக மாறிவிடுகிறது.
போதிதர்மரை ஆராய்ச்சி செய்வதர்க்காக அவர் வாழ்ந்த இடங்களை தேடி வந்த புத்த பிட்சுக்கள் பல இடங்களில் தேடி அழைந்து அவர் தவம் செய்த இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஜப்பானிலிருந்து கிடைத்த ஆய்வுக்குறிப்புகள் மூலம் சிறிய ஆலமரங்கள் (Small Banyan Tree) அதிகமாக உள்ள இடத்தில் தான் போதிதர்மர் அமர்ந்து இருந்தார் என்ற குறிப்பை வைத்து அவர்கள் கண்டுபிடித்த இடம் குற்றாலம் குற்று+ஆலம் சிறிய ஆலமரங்கள் அதிகமாக உள்ள இடம். அங்கு குகையில் கிடைத்த சில கல்வெட்டுக்கள் ஜப்பானிய மொழியில் உள்ளன. இதுபோல் பல சிறப்புகளை கூறிக்கொண்டே செல்லலாம் நேரமும் இடமும் போதாது.
அத்ரிமலைக்கு செல்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகள் அத்ரிமலை யாத்திரையை தொடங்கும் முன் அந்த மண்ணை தொட்டு வணங்கி அந்த மண்ணின் புனிதத்தன்மை கெடாமல் பார்த்துக்கொள்வேன் என்ற உறுதியுடன் செல்ல வேண்டும். பாலித்தீன் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். புலால் உணவு உண்பவர்கள் புலால் உணவை சிறிது நாட்கள் தவிர்த்தப்பிறகே செல்ல வேண்டும்.
அத்ரி மலைக்குச் செல்லும் வழி
நெல்லை புது பஸ் நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி வழியாக தென்காசி போகும் அனைத்து பேருந்துகளும் ஆழ்வார்குறிச்சி வழியாகச் செல்லும். அந்த இடத்தில் இறங்கி ஆட்டோவில் நாம் கடனாநதிக் கரைக்கு வரலாம். தென்காசி அல்லது அம்பா சமுத்திரத்தில் இருந்து கடனாநதி அணை வரை டவுன் பஸ் வசதி உண்டு. ஆலங்குளத்தில் இருந்து வாகனத்தில் செல்பவர்கள், இடைகால் விலக்கு என்ற இடத்துக்கு வந்து பின் அங்கிருந்து வலது புறம் திரும்பி பொட்டல் புதூர் வழியாக ஆழ்வார்குறிச்சியை அடையலாம். இங்கு செல்லுமுன் சிலருடன் தொடர்பு கொள்வது நல்லது. இங்குள்ள பக்தர்களை திரட்டி பூஜைகளை நடத்தி வரும் பெரியவர் கண்மணி இசக்கியை - 9994990167 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் வேண்டிய உதவிகளை செய்வார்கள்.
பிரம்மச்சரியம், கிரகஸ்த தர்மம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வர்ணாஸ்ரம தர்மங்களை நம் மத நூல்கள் வலியுறுத்துகின்றன. அவற்றில் இந்த வானப் பிரஸ்தம் என்பது மிக முக்கியமானதாகும். வாழ்வின் லட்சியங்களைக் கடந்து, பிறகு நான் யார் எனும் கேள்விக்கு விடை காண விழையும் முயற்சியே வானப் பிரஸ்தம். நாட்டின் நெரிசலில் சிக்கித் தவிக்காமல் காட்டின் ஏகாந்தம் தேடும் முதிர்ச்சி நிலையே வானப்பிரஸ்தம். ரிஷிகள் காடுகளில் தவமியற்றினார்கள். அதோடு தங்களின் தவச் சக்தியினை சக்தி நிலையங்களாக மாற்றி காடுகளுக்குள் சுழல விட்டார்கள்.
குகைகளுக்குள் சிவலிங்கங்களாக ஸ்தாபித்தார்கள். அதை வணங்குவதற்காகவே முனிவர்களும், ரிஷிகளும் காடுகளுக்குள் குடியேறினார்கள். யுக யுகங்களாக ஜீவன்களை கடைத்தேற்றும் பொருட்டு ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் மலைகளும் காடுகளும் இடையறாது பணியாற்றுகின்றன. ‘‘எங்கேயோ குகைக்குள் அமர்ந்திருக்கும் யோகி உலகத்தையே மாற்றும் சக்தியை பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய ஓர் எண்ணம், சிறிய சங்கல்பம் எல்லோர் மனதிலும் தாக்கத்தை உண்டு பண்ணும், சமூகத்தையே மாற்றும்’’ என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு. அப்படித்தான் அத்ரி மலையும் எல்லோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதை அப்படி மகத்துவமிக்க மலையாக மாற்றியவரே அத்ரி மகரிஷியாவார். தன் திருப்பெயரிலேயே இந்த மலை விளங்கும் அளவிற்கு அவரின் அருளாட்சியும் தவ பலமும் மலை முழுவதும் வியாபித்திருக்கிறது. குறிப்பாக பொதிகை மலையை பெருமை மிக்க மலையென்பர். இதை தென்கயிலை என்றும் அழைப்பர். தற்போதும் மே மாத சுட்டெரிக்கும் வெயில் சமயங்களில்கூட அதே மாவட்டத்திலுள்ள பொதிகை மலையை மேகங்கள் சூழ்ந்து பனி படர்ந்த கயிலை போல காட்சியளிக்க வைக்கும் விந்தையைக் காணலாம். இந்த ஒரு காரணமும் கூட பொதிகை தென்கயிலையாக மாறியதற்கு காரணமாக இருக்கக் கூடும். தமிழ் தோன்றியதும், தென்றல் தோன்றியதும் இதே மலையில்தான் (பொதிகை என்று அரசு டிவி சேனலுக்கு பெயருக்கு காரணம் இந்த மலை தான்).
அகத்தியர் எப்போதும் பொதிகையின் உச்சியில் ரூப, அரூப நிலைகளில் வாழ்ந்து வருகிறார். மூன்று நாட்க ள் பயணித்தால் பொதிகையை அடையலாம்.
அதுவும் தற்போது தமிழகம் வழியாகச் செல்ல அரசின் அனுமதி இல்லை. கேரளத்தின் வழியாகத்தான் சென்று வந்தார்கள். ஆனால், அதற்கும் கேரள அரசு தற்போது தடை போட்டு விட்டது. அகத்திய தரிசனம் இனி கிட்டாதோ என்று பக்தர்கள் வாடிப் போய் உள்ளனர். பக்தர்கள் விரும்பும் பொதிகை மலை பயணம், கடினமானதுதான். ஆனால், எளிதில் கிடைக்காது.
அடுத்து மகேந்திர மலை. இதுவும் பொதிகை மலையின் ஒரு பகுதிதான். இங்கு முருகப் பெருமான் மற்றும் ஆஞ்சநேயரின் திருப்பாத தரிசனத்தை பார்த்துப் பரவசமடையலாம். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இந்த பயணம் பக்தர்களுக்கு கடினமாக இருந்தாலும் இனிமையோடு ஏற்று சென்று வந்தனர். ஆனால், தற்போது மகேந்திர கிரியில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்ட காரணத்தினால், இங்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் சதுரகிரி யாத்திரையை விரும்பி மேற்கொள்கிறார்கள். அங்கு பொங்கிப் பெருகும் சித்தர்களின் பூரண சக்தியைப் பருகு வதற்காகவே மக்கள் ஆயிரக்கணக்கில் சென்ற வண்ணம் உள்ளனர்.
அகத்தியர் உட்பட அனைத்து சித்தர்களும் இங்கே வாசம் செய்கிறார்கள். இங்கு சென்று வந்த பின், பக்தர்கள் வாழ்க்கையில் பெரும் திருப்பம் பெறுகின்றனர். அதுபோல தெற்கேயுள்ள மற்றுமொரு மலைதான் அத்ரி மலை, அத் ரிநாத் என்றழைக்கின்றனர். இங்குதான் அத்ரி மகரிஷி குடும்பத்தோடு வாசம் செய்கிறார். சித்தர்களால் பெருமையோடு போற்றப்பட்ட பொதிகையின் ஒருபகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மகரிஷி தமது சீடர்களோடு தங்கியிருந்து அருள் பாலித்த வனப்பகுதி இதுதான். இந்த வனத்தை ‘ஸஹ்யாரி’ என்று ராமாயணம் புகழ்கிறது. சதுரகிரியில் கூட அத்ரி வனம் என்று ஒன்று உள்ளது. இது அவர் வந்து தங்கும் இடமாகவும் பல்வேறு சித்தர்களை சந்திப்பதற்காக உருவான ஆஸ்ரமமாகவும் விளங்கியது. ஆனால், அத்ரி மலையே அத்ரி மகரிஷியின் தலையாய இடம். அவருடைய கோட்டை, ஆதி பீடம்.
கடனா நதி அணையின் மேல், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்தான் அத்ரி தபோவனம் அமைந்துள்ளது. இயற்கை அழகும் தெய்வீகச் சூழலும் குழைந்திருக்கிறது. இறையருள் நிறைந்த வனமாக காட்சியளிக்கும் இத்தலத்திற்கு ஒரு முறை சென்று வந்தாலே அதன் தாக்கத்தை உணரலாம். பொதுவாகவே மகரிஷிகள் வாசம் செய்த பகுதிகளுக்குள் சென்று வரும்போதெல்லாம் மனம் புறத்தே ஓடுவது கொஞ்சம் நிற்கும். மோட்சம், ஆன்மா - இவற்றின் வீர்யம் புரியும். இதனால்தான் புராண காலங்களிலிருந்தே வனத்தைத் தேடி அரசன் உட்பட ஆண்டி வரை எ ல்லோரும் சென்றிருக்கிறார்கள். அப்படித்தான் அத்ரியின் மகத்துவம் புரிந்த அடியார்கள் அத்ரி மலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அத்ரியும் பக்தர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது.
வடக்கே கேதார்நாத் என்றொரு சிவத்தலம் உண்டு. இந்தத் தலத்தை பனிமலை வழியாக நடந்து அல்லது குதிரையில் பயணித்துதான் அடைய முடியும். தெற்கின் கேதார்நாத் எனும் பொருள் வரும்படியாக அத்ரி நாத் என்றே இத்தலத்தை அழைக்கிறார்கள். இங்கே தென் கங்கையாம் கடனாநதி தோன்றியது. கோரக்கருக்கு அத்ரி ரிஷி அருள் புரிந்த வரலாறும், ராமாயண, மகாபாரத நிகழ்வுகளும் பல அரங்கேறியுள்ளன. அதற்கான சுவடுகளை நாம் காணலாம்.
நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம்
ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது.
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை.
தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர்.
ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார்.
ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள்.
ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா. தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள்.
      இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும்
சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர். ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி மகரிஷி.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார். பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவிலும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி
மஹரிஷிடையதே.
     யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது. இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர்.
வைத்திய சாஸ்திரத்திரலும், ஜோதிட சாஸ்திரத்திலும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும்.
பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.
இங்கு ஸ்ரீ அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார்.
மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.
மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது.
இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு.
அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.
பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன. இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை
சித்தர்கள் பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது
இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;
வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு.
அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள். வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;
பாம்பாட்டிச் சித்தரின் சீடர் சிவப் பிரபாகர சித்தயோகியின் வழித் தோன்றல்களில் மிக முக்கியமானவர் பிரம்மஸ்ரீ சித்தராஜ சுவாமிகள். இவரும் இந்த அத்ரி தபோவனத்தில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்துள்ளார். இவர் காலத்தில் கூட கோயில் சரியாக கட்டப்படாமலேயே இருந்தது. புதர்களும் மரத்தில் இருந்து விழுந்த இலைகளும் குவியல் குவியலாக கிடக்கும். காட்டுக் கோழிகளெல்லாம் இலைச் சருகுக்குள் நுழைந்து காணாமல் போய்விடும். அதைப் பிடிக்க சருகுகளுக்குள் தேடினால் வேறொரு சருகுக் குவியல்களின் வழியாக வெளியேறிவிடும்.
அந்த அளவுக்கு இலைச்
சருகுகள் அம்பாரமாகக் குவிந்திருக்கும்.
அத்ரி தபோ வனத்தில் தற்போது அத்ரி மகரிஷிக்கு பூஜை நடைபெறும் மரமே ஒரு குடைபோல் இருக்கிறது. இது வெயிலாலோ மழையாலோ தவத் திற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாதபடி பாதுகாப்பாக அமைகிறது. தற்போது இந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. தவசீலர் சித்தராஜ சுவாமிகள்தான் இந்த மலையைப் பற்றியும், அத்ரி மகரிஷியின் தபோவனத்தின் சிறப்பு களையும் மலையாளத் தில் நூலாக எழுதினார்.
அந்த நூலை தமிழில் ராமானுஜம் சுவாமிகள் எழுதியுள்ளார். இந்த நூல்தான் அத்ரி தபோவனத்தினைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூலாகும்.
அதன் பிறகு இந்தக் கோயிலுக்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இவர்கள்தான் வள்ளி-தெய்வானை சமேத முருகனை பிரதிஷ்டை செய்தவர்கள்.
அதோடு, வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். காவடி, பால்குடம் எடுத்துச் செ ல்லுதல், அலகு குத்துதல் போன்ற நிகழ்வுகளை இங்கு உருவாக்கியவர்களே பாம்பாட்டிச் சித்தரின் சீடர்கள்தான்.
பாம்பாட்டிச் சித்த ருக்கு மருத மலை, துவாரகை, விருத்தா சலம் போன்ற மூன்று தலங்களில் ஜீவசமாதி இருப்பதாகக் கூறுகி றார்கள். அதே போல் சங்கரன் கோயிலுக்கு அருகே புளியங்குடி பாதையிலும் ஒரு ஜீவ சமாதி உண்டு. அதாவது, அத்ரி மலையில் பதினாறு வருடங்கள் தவமிருந்த பின்னர், சித்தியான இடமும் இந்த இடத்தில்தான் உள்ளது.
சித்தர் ஒரே சமயத்தில் பல பகுதிகளில் தம் இருப்பைக் காட்ட வல்லவர்கள் என்ற அடிப்படையில் இப்படி ஜீவசமாதிகள் அமைந்திருக்கலாம் என்கிறார்கள்.
அத்ரியில் தவமிருந்த போதுதான் சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தினை கட்ட வேண்டும் என்று உத்தரவாகியுள்ளது. அதன்படியே அந்தப் பீடத்தினை பெரிதாக கட்டியுள்ளார்கள். இதில் கல்யாணிபுரம் மாரிவேல் என்னும் பெரியவர் தற்போது பாம்பாட்டிச் சித்தரின் வாரிசுகளோடு அத்ரி மலைக்கு வந்து செல்கிறார். கோயில் பிரபலம் ஆவதற்கு முன்னாலிருந்தே அவர்கள் இப்படி வருவது வழக்கம். மலையில் கிருத்திகை, அஷ்டமி காலங்களில் முருகனுக்கு பூஜை செய்வார்கள்.
அவர்கள் இரவு வரை தங்கியிருந்து பூஜை செய்வார்கள். பின்பு, இங்கிருந்து மலை மீது சற்று தூரமுள்ள கருப்பசாமி கோயிலுக்கும் சென்று பூஜை நடத்துவார்கள். இரவு வேளையில் பக்தர்கள் மூலிகை காபியை குடித்துக் கொண்டும், முருகப் பெருமானை தரிசித்தபடியும் நோய்கள் குணமாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் ஆகாதோர் சந்தன அபிஷேகம் செய்து, அந்தச் சந்தனத்தினை முருகப் பெருமானின் மார்பில் வைத்து விடிய விடிய பூஜித்து மறுநாள் காலையில் அதை பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள்.
விரைவிலேயே அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி விடும். இதுபோலவே குழந்தை வரம் வேண்டுவோரும் செய்வார்கள். சங்கரன் கோவில்-புளியங்குடி ரோட்டில் அமைந்துள்ள பாம்பாட்டிச் சித்தருடைய ஜீவசமாதியானது சில வருடங்களுக்கு முன்புதான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அத்ரி மலையில் தவமிருந்த பாம்பாட்டிச் சித்தரின் சீடர்களே ஆவார்கள்.
சித்தர்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போகர் விளக்குகிறார்.
பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்
பல விதமா யகண்ட பூமியெல்லாம்
ஆரப்பா வங்குமிங்கு நிறைந்து நின்றாரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்
சீரப்பா சித்தருட மூலங்காணச்
செகத்திலே யெவரறியப் போராரையா
நேரப்பா நாமறிந்த சிறிது சொன்னோம்
நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே
(போகர் ஜெனன சாரம் - 324)
இந்த அகண்ட பூமியில் அங்கும், இங்கும், மலைகளிலும், குகைகளிலும் நிறைந்து நிற்கின்றனர் சித்தர்கள். அவர்களுடைய சீடர்களும் நிரம்பியிருக்கின்றனர்.
சித்தருடைய மூலத்தைக் கண்டறிய இவ்வுலகத்திலே யாருக்கும் சக்தியில்லை. ‘என்னால் என் சக்திக்கு இயன்றவரை சிறிது சொன்னேன். தங்களை வெளிக் காட்டாமல் எல்லாச் சித்தர்களும் மறைந்தே வாழ்கின்றனர்’ என்று போகர் கூறுகிறார். அதனால்தான் அத்ரி தபோவனத்தில் பாம்பாட்டிச் சித்தர் உட்பட பல சீடர்கள் தவம் புரிந்துள்ளார்கள்.
    இப்படி 50 வருடங்களுக்கு முன்புவரை நிகழ்ந்திருக்கிறது.
பாம்பாட்டிச் சித்தரின் வழி தோன்றலில் வந்த சீடரான சித்தராஜ சுவாமிகள் அத்ரி மலையில் தவமிருந்தபோது, உடன் கல்யாணிபுரம் மாரி வேல் இருந்திருக்கிறார். அதாவது, மாரிவேல், தனது பத்து வயதிலிருந்தே சித்தராஜ சுவாமிகளோடு இருந்திருக்கிறார். இதைப் பற்றி மாரிவேல் ஐயா கூறுகிறார்: ‘‘அப்போ சுவாமிகள் தபோவனத்துக்கு வந்து தவமிருக்கும்போது புலி, கரடி, கடுவாய், யானை கூட்டங்களும் மலையிலிருந்து இறங்கி தபோவனத்துல வந்து நிற்கும். இந்த கூட்டங்களோட கூட்டமா சித்தராஜ சுவாமிகள் இருப்பார். ராத்திரியில் தீ மூட்டி தங்குவோம்.
விஷப் பாம்புகள் அலையும். சிலசமயம் பாய்க்கு அடியில கூட கிடக்கும். ஆனா, எந்த தொந்தரவும் பண்ணாது. ஐயா அவங்க ரெண்டு மரங்களுக்கு நடுவுல கயிறு கட்டி தொட்டில்போல் செஞ்சு படுப்பாங்க. மத்தவங்களெல்லாம்
அங்கங்க படுத்து உறங்குவாங்க. ஆனா, ராத்திரியில எழுந்து அவரைத் தேடினா இருக்க மாட்டாரு. எங்க போயிருப்பாருன்னு கண்டு பிடிக்கவே முடியாது. தபோவனத்துக்கு மேல இருக்கற கருப்பசாமி கோயிலுக்கும், காளி கோயிலுக்கும் பூஜை பண்ணிட்டு வருவாரு.
ஆனா, காலையில கயிறு ஊஞ்சலில் படுத்து கிடப்பாரு. ஆனையடி தம்பிரான் கோயில் சுவாமிகள், நிர்மானந்தா சுவாமிகளெல்லாம் கூட தபோவனத்துக்கு வருவாங்க. அப்படித்தான் திடீர்னு ஒருநாள் சங்கரன் கோவில்ல பாம்பாட்டிச் சித்தரோட ஜீவ சமாதியை சீரமைத்து வழிபாட்டு தலமாக அமைக்க உத்தரவு வந்ததா சொன்னாரு. அந்த பணியை செய்யப் போறேன்னாரு. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சியா இருந்தது. ஏன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கும் அத்ரிமலைக்குமான தொடர்பு அப்போ பலபேருக்கு தெரியாமயே இருந்தது’’
அத்ரி மலைக்கு செல்லும் வழியினை பார்ப்போம்:-
நெல்லையை அடைந்து அங்கிருந்து அம்பாசமுத்திரம் அடுத்துள்ள , ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 7 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.
அத்ரி மலையில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை!!!
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறுச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்திரி மலையில ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 16-04-2016 தேதி
சனி கிழமை ஆயில்யம் நட்சத்திரம் தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி அருள் பெறவும்.

No comments:

Post a Comment