Tuesday 19 April 2016

தமிழர்களின் நீர்வளமும் பாசன முறைகளும்

தமிழர்களின் நீர்வளமும் பாசன முறைகளும்

அக்காலத்தில் தமிழ்நாட்டில் (சுதந்திரத்திற்கு முன்) நீர்வளமும், பாசனமும் நல்ல நிலையில் இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு வரையிலான சரித்திரத்தை இங்கு கண்போம்.

பாரம்பரிய முறைகள் :

தமது பகுதிகளில் பெய்யும் மழையளவைக் கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்களையும் பயிரிட்டு வந்தனர். இயற்கையிலேயே நீர்வளம் மிகுந்த இடங்களில், அங்குள்ள தேவைகள், மண்வளம், கலாச்சாரம், தட்ப வெப்பத்திற்கு ஏற்ற கிணறுகள், ஏரிகள், வெள்ளப் பாசனக் கால்வாய்கள், ஊற்றுக்கால்கள், கசக்கால்கள் ஆகியவற்றை புத்திசாலித்தனமாக வடிவமைத்துப் பராமரித்து வந்தனர். வாழ்வுக்கே ஆதாரமாக விளங்கும் இந்த நீர்நிலைகளைப் புனிதமாகக் கருதி வணங்கியும் வந்தனர்.

ஏரிகள் :

தமிழ்நாட்டில் மட்டும் 44,000 பெரிய ஏரிகள் இருந்தது. சங்கிலித் தொடராக அமைந்த இந்த ஏரிகள் வழியெல்லாம் உள்ள நிலங்களைச் செழுமையாக்கிக் கடைசி மட்டத்தில் கோயில் குளங்களாக முடிந்தன என்பதையும் அறிய முடிகிறது.

வெள்ளப் பாசனக் கால்வாய்கள் :

பாரம்பரியமாக நதிகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் வெள்ளப் பாசனம் செய்துவந்தன. அதாவது, வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவை வழிந்து, நதியின் இரு புறங்களிலும் உள்ள வயல்கள் மூழ்கிவிடும். இதன் மூலம் அந்த வயல்களில் பாசனம் நடைபெறும்.

இவை மேற்பரப்பு நீராதாரங்களின் கசிவுகளால் மற்றும் நிலத்தடி நீர் ஊற்றுகளால் ஆனவை.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன்

ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய காலங்களில், நீராதாரங்கள் கிராம அளவில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகளால் இந்தியாவின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்புகள் பாதிப்புக்குள்ளாயின.

பண்டைய காலத்தில் உள்ள உள்ள+ர் நிர்வாகம், பாசன அமைப்பு முறைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை அனைத்தும் மக்களிடமே இருந்துவந்தது. கூடவே, அவற்றுக்கான அதிகாரம், கட்டுப்பாடு, பொறுப்பு ஆகியவையும் இருந்தன.

வெள்ளத் தடுப்புக் கரைகள் :

ஆண்டுதோறும் வெள்ளத்துடன் ஒத்துழைத்து, வேளாண்மையை மேற்கொண்ட முறையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ஆங்கிலேயப் பொறியியலாளர்கள் வெள்ளக் கட்டுப்பாடு என்கிற ஒரு புதிய கருத்தை அறிமுகம் செய்தனர். வண்டல் மண் நிலத்தில் பரவ வாய்ப்பில்லாமல், நதிப்படுகையிலேயே தங்கியதால் நதியின் கொள்ளளவு குறைந்தது. இதை கரையை மேலும் உயரமாக எழுப்பினர் ஆங்கிலேயர். காட்டு வெள்ளம் வரும்போது, இந்தச் சுவர் போன்ற கரைகள் ஆங்காங்கே உடைந்து, கிராமங்கள் அழிந்தன. இந்தக் காட்டு வெள்ளத்தினால் பயிர்கள் சேதமானது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் தவறாமல் கிடைத்துக்கொண்டிருந்த வளமான வண்டல் மண் கிடைக்காமல் போனது. அதோடு இருந்த வளமான மேல்மண்ணையும் அரித்துக் கொண்டுபோனது.

No comments:

Post a Comment