Sunday 17 April 2016

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை நட்சத்திரம்

27 நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு, க, ங, ச, கூ, கா ஆகியவை ஆகும். திருவாதிரை மிதுனம் ராசிக்குரியவர் ஆவார்.

நட்சத்திரத்தின் பொது பலன்கள் :

திரு என்ற அடைமொழியை கொண்டிருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால் இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபமும் முரட்டு தனமும் அதிகமிருக்கும். காரிய வாதியாக திகழும் இவர்கள் தங்களுடைய நன்மைக்காக பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உற்றார் உறவினர்களை அடிக்கடி பகைத்து கொள்ள நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல பேசுவதால் இவர்களை இரட்டை நாக்குள்ளவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும், எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விடாத பிடிவாத குணமும் நிரம்பியிருக்கும். தங்களைப் பற்றியே எந்த நேரமும் புகழ் பாடி கொண்டிருக்கும் தற்பெருமை கொண்டவர்கள். தேவையற்ற வாக்கு வாதங்களால் நண்பர்களை இழக்க கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க நேரிடும். பிறரை பற்றி இழிவாக பேசுவதில் வல்லவர்கள்.

நட்சத்திரத்தின் திசை பலன்கள் :

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகு திசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையிடம் கருத்து வேறுபாடு, பெரியோர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை போன்றவை ஏற்பட்டாலும், ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும்.

இரண்டாவதாக வரும் குருதிசை காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.

மூன்றாவதாக வரும் சனி திசையிலும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் எதிலும் முன்னேற்றமும், வேலையாட்களின் ஒத்துழைப்பும் கிட்டும். சனி பலமிழந்திருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

நான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களிலும் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

ஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

வழிபாட்டு ஸ்தலங்கள் :

திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக பைரவர் திருக்கோவில்.

சென்னை திருவற்றியூரிலுள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் திருக்கோவில்.

சென்னை பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி திருக்கோவில்.

No comments:

Post a Comment