Thursday 21 April 2016

21-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

ரோம் நகரம் உருவாக்கப்பட்ட தினம்

ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் நகரின் கலாச்சாரமே சிறந்த வழிகாட்டியாகும். இது இத்தாலியின் தலைநகரம் ஆகும். ரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது. பழங்கதைகளின்படி கி.மு.753 இல் ரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் ரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் இந்நகரம் முடிவுறா நகரம் என்றும், உலகத்தின் தலைநகர் என்றும் அழைக்கப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி புதுவையில் பிறந்தார். இவரது பெற்றோர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆவார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம் ஆகும்.

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். இவர் தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

♧ பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், புரட்சி கவிஞர் என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவி என்ற பட்டமும் வழங்கினர். தமிழக அரசு, இவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு 'பாரதிதாசன் விருதினை" வழங்கி வருகிறது. இத்தகைய சிறப்புகளை பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இயற்கை எய்தினார்.

வாண்டுமாமா வி.கிருஷ்ணமூர்த்தி

சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவருமான வாண்டுமாமா என்றழைக்கப்படும் வி.கிரு~;ணமூர்த்தி அவர்கள் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி படிக்கப் பிடிக்காத சிறுவர்களைக்கூட ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் வகையில் எழுதுவது இவரது தனிச் சிறப்பாகும். குழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், அறிவியல் நூல்கள், சித்திரக்கதைகள் உள்ளிட்ட ஏராளமான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான பரிசுகள், சிறப்பு வெளியீடுகளுக்கான பரிசு உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு ஜீன் 12 ஆம் தேதி மறைந்தார்.

1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பானிபட் போர் டில்லியின் சுல்தான் இப்ராகிம் லோடிக்கும், தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது.

கிண்டர் கார்டன் கல்விமுறையை உருவாக்கிய ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் பிரெட்ரிக் புரோபல் 1782 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்தார்.

சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும் கூடி வரும் பௌர்ணமி நாளான சித்ரா பௌர்ணமி இன்று கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment