Saturday 2 April 2016

02-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்.!

சுதந்திர போராட்ட வீரர் வ.வே.சு. ஐயர்

சுதந்திர போராட்ட வீரரும் தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்பட்டவருமான வ.வே.சுப்பிரமணிய ஐயர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சி, வரகனேரியில் பிறந்தவர். இவர் கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். 1919 இல் மகாத்மா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரால் கவரப்பட்ட ஐயர், அகிம்சாவாதியாக மாறினார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அகிம்சை வழியில் சுதந்திரத்துக்காகப் போராடினார். தேசபக்தன் இதழின் ஆசிரியராக சிலகாலம் பணியாற்றினார். 1922 இல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.

இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு. தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்றும் போற்றப்படும் வ.வே.சு. ஐயர் அவர்கள் 1925 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தனது 44 வது வயதில் ஒரு விபத்தில் காலமானார்.

உலக சிறுவர் புத்தக தினம்

உலக சிறுவர் புத்தக தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் அவர்கள் 1805 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் தனது 14 வது வயதில் நடிகராக வேண்டும் என எண்ணினார். பின் குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது கதை புத்தகங்கள் 125 மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐடீடீலு அமைப்பானது இத்தினத்தை கடைபிடிக்கிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த அமைப்பு, தற்போது இந்தியா உள்ளிட்ட 72 நாடுகளில் செயல்படுகிறது.

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

ஏப்ரல் 2 ஆம் தேதி சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு மட்டுமே. இது குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் முக்கிய நோக்கம். ஆட்டிசன் என்றால் மன நலம் குன்றியவர்கள் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். நாம் சாதாரணமாகச் செய்கின்ற செயல்களை, இவர்களால் தானாக செய்ய இயலாது. அதேநேரத்தில், இவர்களிடம் வியக்கவைக்கும் திறமைகள் இருக்கும்.

1845 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி சூரியப்புள்ளிகளை முதன்முதலாக 3 விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்தனர்.

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மேகாலயா மாநிலம் உருவானது.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி லண்டனுக்கும், சென்னைக்கும் இடையே முதன்முதலாக நேரடி விமானப் போக்குவரத்து ஆரம்பமானது.

No comments:

Post a Comment