Friday 25 March 2016

கஸ்தூரிபாய் காந்தி

கஸ்தூரிபாய் காந்தி

“சத்தியம், அகிம்சை, விடுதலைக்கு
தன் வாழ்நாள் முழுவதும்
ஒத்துழைப்பு தந்தவள் - நீ..!
கணவரின் கொள்கையை
தவறாமல் பின்பற்றிய
பெண்ணே நீ தானே..!!
எங்களின் முன்மாதிரி...!!!”
  இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869ல் பிறந்தார் கஸ்தூரிபாய். இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில், குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபாய் கவனித்துக் கொண்டார். இத்தம்பதியினருக்கு, ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ், ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

  கணவரின் “சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம்” ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897ல் தொழில் நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாயும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தியும் கஸ்தூரிபாயும் வசித்தனர். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிராக கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.

  இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபாய் காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபாய், கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

  1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின் இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபாய் காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், “கணவரின் பாதையே தனது பாதை” என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு “ராட்டை” நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். 1944ல் சிறையில் இருக்கும்போதே மரணம் அடைந்தார் கஸ்தூரிபாய் காந்தி.

  கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று, தன் உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்க வேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு அணிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment